Thursday, 14 November 2013

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 40 யானைகள்: ரயில் மோதி 6 யானைகள் பலியான பரிதாபம்


கொல்கத்தா: சுமார் 40 யானைகள் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவற்றின் மீது ரயில் மோதியதில் 6 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாயின. மேலும், காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் இருந்து 55 கி.மீ துரத்தில் உள்ளது சல்சா வனப்பகுதி. இப்பகுதி வழியாக நேற்று மாலை 5.45 மணிக்கு 40 யானைகள் சென்று கொண்டிருந்தன.

அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அசாமின் திப்ருகருக்கு விரைவு ரயில் ஒன்று கடந்து சென்றது.

எதிர்பாராத விதமாக ரயில் வந்த வேளையில் யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளது. இதில், ரயில் மோதி 6 யானைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயின. விபத்தில் சிக்கி மேலும் பல யானைகளுக்கு காயங்கள் ஏற்பட்டது.

விபத்துக் குறித்து தகவலரிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்த யானைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொண்டனர்.

பின்னர், அங்கு நிறுத்தப் பட்டிருந்த ரயிலில் வந்த பயணிகளை மீட்டு அலிப்பூர்தாரில் இருந்து வந்த மற்றொரு ரயிலில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.


0 comments:

Post a Comment