Thursday, 19 September 2013

பாப்கார்ன் - வெல்ல முடியாத சோதனைகள்



வெல்ல முடியாத சோதனைகள்

சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முக்கிய நட்சத்திரங்களை வருந்தி அழைக்கிறார்கள். ரஜpனி, கமல் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். விஜய்க்கு அழைப்பிதழ் தரலாமா, கூடாதா என்பதை விழாக்குழுவால் தீர்மானிக்க இயலவில்லை என்கிறார்கள். யார் யாருக்கு அழைப்பு என்பதை அரசுதான் தீர்மானிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
பொதுவான விழாவுக்கு சொந்த கோபதாபங்களை காட்டுவது சரியானதல்ல. ஆனால் காலங்காலமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. விழாவில் பங்கேற்பதால் விஜய்யின் மவுசு தடாலடியாக உயரப் போவதில்லை. பங்கேற்காததால் எதுவும் குறைந்துவிடப் போவதுமில்லை. விஜய்யைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்றுதான். அதே நேரம் மனரீதியாக தொடுக்கப்படும் இந்த தாக்குதல்கள் எந்த நடிகருக்கும் நெருக்கடியானதே.

இதுபோன்ற நெருக்கடிகளை வெளிப்படையாக அணுக முடியாத மொண்ணையான அமைப்பாக திரைத்துறை இருப்பதுதான் கவலைக்குரியது. கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ இப்படி ஒரு நடிகரை தனியாக கட்டம் கட்ட முடியுமா?
இப்படியும் காமெடியை ரசிக்கலாம்

டிவியில் ஒரே காமெடியை போட்டு போரடிக்கிறாங்க என்று கவலையா? கவலையே வேண்டாம். பார்த்த காமெடியிலேயே பார்க்காத விஷயங்கள் நிறைய இருக்கும். முக்கியமாக காமெடி காட்சிகளின் பேக்ரவுண்ட். மருதமலை படத்தில் அம்மா பாசத்தில் அழும் அக்யூஸ்ட் கிரேன் மனோகரை வடிவேலு வலுக்கட்டாயமாக அர்ஜுனின் பேச்சை மீறி அழைத்துச் செல்லும் காட்சி நினைவிருக்கிறதா? கிரேன் மனோகர் எஸ்கேப் ஆகும் அந்தக் காட்சியின் பின்னணியில் பலரும், தெரு மாதிரியான சூழலை உருவாக்க நடந்து கொண்டிருப்பார்கள். அதில் நடக்கும் அனைவரும் பத்து விநாடிகளுக்கொருமுறை அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் நடந்து கொண்டேயிருப்பார்கள். வடிவேலு காமெடிக்கு இணையாக சிரிப்பை தரக்கூடிய காமெடி இது. அதேபோல் படிக்காதவன் படத்தில் வரும் ரயில்வே ஸ்டேஷன் விவேக் காமெடி. இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம்.

துணை நடிகர்கள் என்று இயக்குனர்களுக்கு கிடைப்பவர்கள் அவ்வளவு சிறப்பானவர்கள் இல்லை. நிமிர்ந்து பார்க்கச் சொன்னால் பார்ப்பார்கள், நேராக நடக்கச் சொன்னால் நடப்பார்கள். சூழலுக்கு ஏற்ற ரியாக்ஷன் அவர்களிடமிருந்து கிடைப்பது ரொம்ப கடினம். இவர்களை கையாள்வதை வைத்தே இயக்குனரின் திறமையை ரளவு மதிப்பிடலாம்.

நூற்றாண்டுவிழா புறக்கணிப்புகள்

சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் படங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு திரையிடப்படுகிறது. இவர்கள்தான் நூற்றாண்டுவிழா நாயகர்களா? முதல் மௌனப் படத்தை தந்த நடராஜ முதலியார் தொடங்கி எத்தனையோ இயக்குனர்கள், டெக்னீஷியன்கள் சினிமாவுக்கு பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்கள். சாதாரண காலங்களில்தான் அவர்களை நினைவுகூர்வதில்லை என்றால் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திலுமா? பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிற வகையில் அவர்களை முதன்மைப்படுத்தி படைப்புகளை திரையிட்டிருக்க வேண்டும். சில கோரிக்கைகள் எப்போதும் நிறைவேறுவதில்லை. அதில் இதுவும் ஒன்று.

தீபாவளிக்கு நான்கு படங்கள் சாத்தியமா?

அஜித்தின் ஆரம்பம்...
கார்த்தியின் அழகுராஜா, செல்வராகவனின் இரண்டாம் உலகம், விஷாலின் பாண்டிய நாடு என்று நான்கு படங்கள் தீபாவளியை குறி வைக்கின்றன. தமிழகத்தில் ரிலீஸ் படங்களை வெளியிடுகிற திரையரங்குகளின் எண்ணிக்கை 750 க்குள்தான். அதில் தரமானவை இன்னும் குறைவு. ஒரு மாஸ் நடிகரின் படம் 300 முதல் 350 திரையரங்குகளில் வெளியாகும். எனில் இரண்டு படங்களுக்குதான் திரையரங்குகள் சாத்தியம். முட்டி மோதினால் மூன்று. நான்குக்கு சாத்தியமேயில்லை.

ஆந்திராவில் திரையரங்குகளின் எண்ணிக்கை அப்படியே ஒரு மடங்குக்கு மேல் அதிகம். அங்கு சினிமா ஆரோக்கியமாக இருப்பதற்கு திரையரங்குகளின் எண்ணிக்கையும் பிரதான காரணம். பராமரிப்பில்லாத திரையரங்குகள், அதிக கட்டணம், பார்வையாளர்களை நடத்தும் விதம் எல்லாமும் சேர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பொறுப்பில் இருப்பவாpன் திரையரங்குகள் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ளது. அந்தத் திரையரங்குகளில் கட்டண விவரம் எதுவும் இருப்பதில்லை. டிக்கெட்டிலும் கட்டணம் ஒருபோதும் குறிப்பிடப்பட்டதில்லை. அவர்களுக்கு தோன்றுவதுதான் கட்டணம்.

இந்த முறைகேடுகளை கண்காணிக்க, நெறிப்படுத்த எந்த முயற்சியும் அதிகாரிகள் தரப்பில் எடுக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட அந்த திரையரங்கு உரிமையாளர்தான் மேடைகளில் சினிமா சீரழிந்துவிட்டது என்று அடிக்கடி மூக்கு சிந்துகிறார். இப்படி நாயணயமில்லாது நடத்தப்படும் வியாபாரம் சீரழியத்தான் செய்யும். சினிமாவின் ஒளிமயமான எதிர்காலம் சினிமாக்காரர்களின் கைகளில்தான் உள்ளது.

0 comments:

Post a Comment