சினிமா நூற்றாண்டு விழாவை இன்று மாலை முதல்வர் ஜெயலலிதா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திரைத்துறையின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதல்வர், வந்தாரை வாழ வைக்கும் நாடு தமிழ்நாடு. இங்கு தமிழ்நாட்டு கலைஞர்கள் மட்டுமின்றி பிறமொழிக் கலைஞர்களும் இங்கு முன்னணி நடிகர்களாக உள்ளனர். எனது ஆட்சி காலத்துக்கு முன் திரைத்துறை எப்படி செயல்பட்டது என்று உங்களுக்கே தெரியும். ஒருசிலரின் லாபத்துக்காக திரைத்துறை சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போது எனது ஆட்சியில் அப்படியில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. எனது ஆட்சியில் ஏராளமான உதவிகள் திரைத்துறைக்கு செய்யப்பட்டுள்ளது. தேவையான உதவிகள் இன்னும் தொடர்ந்து அளிக்கப்படும் என்றார்.
ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் கமலின் விஸ்வரூபம் தடையை சந்தித்தது. பிற நாடுகள், மாநிலங்களில் படம் வெளியான பிறகும் கலவரம் வெடிக்கும் என தமிழ அரசு படத்தை இங்கு மட்டும் தடை செய்தது. நீதிமன்றம் சென்று நீண்ட போராட்டத்துக்குப் பின்பே படத்தை வெளியிட முடிந்தது.
கடந்த தேர்தலில் திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலால் பிறகு படங்களிலேயே நடிக்க முடியவில்லை. சினிமா நூற்றாண்டு விழாவில் அவர் கலந்து கொள்ள விரும்பியதாகவும், அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.
அதேபோல் விஜய்யின் தலைவா படமும் அரசின் நெருக்கடியை சந்தித்தது. விஸ்வரூபம் போலவே வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வெளியான படம் இரண்டு மூன்று வாரங்கள் கழிந்தே தமிழகத்தில் வெளியானது.
இவை அனைவருக்கும் தெரிந்த நிலையில் திரைத்துறை தனது ஆட்சியில் சுதந்திரமாக செயல்படுகிறது என்ற முதல்வரின் பேச்சு அனைவருக்கும் ஆச்சார்யத்தை அளித்தது.


0 comments:
Post a Comment